Tamilnadu

“இந்த மனநிலையை இந்த மண்ணில் இருந்து அழிக்க நினைக்கும் எவனும் அழிந்து போவான்” : தி.மு.க MP உருக்கம்!

“மத நல்லிணக்கப் பண்பை இம்மண்ணில் இருந்து அழிக்க நினைப்பவர்கள் அழிவார்கள்” என மாநிலங்களவை தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தைச் சேர்ந்த தனது நண்பரின் வீட்டுக்குச் சென்ற தன்னிடம், அவரது மகன் விபூதி இடச் சொன்னது குறித்து மாநிலங்களவை தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா ஃபேஸ்புக்கில் உருக்கமாக எழுதியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எம்.எம்.அப்துல்லா எம்.பி., “இன்று என் நண்பன் ஆனந்த் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நேற்று அவன் பிறந்தநாள். தேர்தல் பணிகளால் நேற்று செல்ல முடியவில்லை.

இன்றைக்கு வீட்டிற்குச் சென்று இருந்து விட்டு கிளம்பும்போது அவனது மகன் மாப்பிள்ளை பாரதி அவர்களது இல்லத்தில் இருந்த பூஜை அறையில் இருந்து விபூதி டப்பாவை எடுத்து வந்து என் கையில் குடுத்து " எங்களை ஆசிர்வதியுங்கள் மாமா" என்றான்.

நானும் அவனுக்கும் அவன் தம்பிக்கும் நெற்றியில் விபூதி இட்டு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனதார அல்லாவை வேண்டினேன்.

அப்துல்லாவான என்னிடம் "என் மதத்தில் கடைபிடிக்காத, எனக்கு பழக்கமில்லாத" விபூதி டப்பாவை குடுத்து வைத்து விடச் சொல்லக் கூடாது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை! அவன் மனதில் அப்பாவின் நண்பனான ஒரு மாமனாக மட்டுமே இருக்கிறேன்!

இந்த மனநிலையை இந்த மண்ணில் இருந்து அழிக்க நினைக்கும், அகற்ற நினைக்கும் எவனாக இருந்தாலும், எந்தத் தரப்பில் இருந்தாலும் அவன் நாசமாகவே போவான்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கலைஞர் அன்று நடுங்கிப்போனார்.. அதுதான் தி.மு.க”: 1999 சம்பவத்தை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!