Tamilnadu

“பெற்ற குழந்தையை 2 லட்சத்து விற்ற தாய் உட்பட 9 பேர் கைது” : விசாரணையில் அதிர்ச்சி தகவல் - பின்னணி என்ன?

விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வறுமை காரணமாக தனது 1 வயது குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது குழந்தையை விற்க முடிவெடுத்தார். இது குறித்து தனது தந்தை கருப்பசாமியிடம் கூறியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த கார்த்தி, சிவகாசியை சேர்ந்த செண்பகமூர்த்தி என்ற புரோக்கர்கள் மூலம் குழந்தையை விற்றுள்ளனர். அக்குழந்தையை மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பிரியா என்ற தம்பதியினர் தங்களுக்கு 20 வருடமாக குழந்தை இல்லாததால் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை வாங்கி உள்ளனர்.

ஆனால், சட்டரீதியாக குழந்தையை தத்து கொடுக்கவில்லை என்பதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், விருதுநகர் சைல்ட் (1098) லைனுக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சைல்ட் லைன் அதிகாரிகள் விருதுநகர் சூலக்கரை போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை செய்ததில் குழந்தையை விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையில் குழந்தை விற்பனை தரகர் மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினர் என கலைச்செல்வி, கருப்பசாமி, பிரியா, கருப்பசாமி, கார்த்திக், நந்தகுமார், செண்பக ராஜன், மகேஸ்வரி, மாரியம்மாள் ஆகியோரை விருதுநகர் சூலக்கரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த விஜயபாஸ்கர்.. கட்சியிலிருந்து நீக்கக்கோரி அதிமுகவினர் முனுமுனுப்பு?