Tamilnadu

கடல் மார்க்கமாக கஞ்சா கடத்த திட்டம்: பண்டல் பண்டலாக சிக்கிய ரூ.2 கோடி கஞ்சா -தஞ்சை போலிஸார் அதிரடி ரெய்டு

விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஏ.டி.எஸ்.பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படை போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி தஞ்சை சரக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது திருச்சியிலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்றும் 3 காரும் வருவதையும் அறிந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.

அதில் இருந்த பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பதை அறிந்தவர்கள், வாகனங்களில் இருந்த 14 பேரையும் 2 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரித்ததில், ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 14 பேரையும் கைது செய்தனர்.

மேலும், விசாகப்பட்டினத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும், இதற்காக 3 குழுக்களாக பிரிந்து காரில் கஞ்சாவை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து மிகப்பெரிய அளவிலான கஞ்சா கடத்தலை தஞ்சை போலிஸார் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Also Read: பழைய வழக்குகளை தூசித்தட்டியதில் ஹேர் ஸ்டைலால் சிக்கிய திருட்டு கும்பல்; சென்னை போலிஸார் அதிரடி!