Tamilnadu

“சுயமரியாதை அற்ற அ.தி.மு.கவினர் பேரறிஞர் அண்ணாவின் பெயரை பயன்படுத்தக்கூடாது” : கனிமொழி MP விளாசல்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தென்காசி மாவட்டத்தில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

செங்கோட்டை நகராட்சி போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசிய அவர், “பேரறிஞர் அண்ணா தொடர்ந்து எழுப்பிய குரல் ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பதாகும். மாநிலங்களுக்கு ஆளுநர் எதற்கு அந்தப் பதவி தேவையில்லை என்று கூறியவர்.

ஆனால் அவரது பெயரை கட்சியில் இணைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க சார்பாக அவர்களுக்கு ஆதரவாக ஒரே நாடு ஒரே தேசம் என பேசிவருகிறார். அடுத்து ஒரே மொழி என்று கூட பேசுவார். ஆளுநர் நினைத்தால் தமிழக சட்டமன்றத்தை முடக்க முடியும் என்கிறார்.

சுயமரியாதை இல்லாமல் கட்சி நடத்தும் அ.தி.மு.க.வினர் அண்ணாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல், அவரது பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம், நீட் தேர்வு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியவர்கள் மீது வழக்கு போட்டவர்கள்தான் அ.தி.மு.கவினர்.

ஆனால் இன்று பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் தி.மு.க-விற்கு பாடம் புகட்டுங்கள் என்கிறார். உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டியதால்தான் இன்று நீங்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் அடுக்கடுக்காக வாக்குறுதி அளித்தார்கள். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். எனவே நல்லாட்சி தொடர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

Also Read: ”நீங்க என்ன குறுக்குசால் ஓட்டினாலும் எடுபடாது; உங்க கனவும் பலிக்காது” - EPSக்கு அமைச்சர் மா.சு., பதிலடி!