Tamilnadu

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு.. கையில் ‘தாலி’யுடன் வந்த கும்பலுக்கு ‘காப்பு’ மாட்டிய காவல்துறை!

காதலர் தினம் என்றாலே பிற்போக்கு அரசியலில் ஈடுபடும் சிலர் தங்களை பிஸியாக காட்டிக்கொள்வார்கள். குறிப்பாக, ‘காதலர்களை அவமானப்படுத்துகிறேன்’ என்று திரியும் பேர்வழிகள் நாய்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, பொது இடங்களில் ஜோடிகளை பார்த்தால் திருமணம் செய்து வைப்பதாக சொல்லி மிரட்டுவது, பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பது போன்று எதையாவது செய்து விளம்பரம் தேடுவதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு சுற்றித்திரிவார்கள்.

இதில் வட மாநிலங்களில் உள்ள இந்துத்வா கும்பலின் அட்டகாசம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திவிடும். அதைப்போல சில கும்பல் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. இந்து முன்னணி என்ற பெயரில் உலா வரும் இந்த கும்பல், சமுதாயத்திற்கான எந்த ஒரு நல்லகாரியத்திற்கும் வெளியே வராமல், காதலர் தினத்திற்கு வெளியே வந்து காதலருக்கு தொல்லை கொடுப்பார்கள்.

அந்தவகையில், இன்று திருச்சி மலைக்கோட்டை அருகே அதிகாலையில் தாலியுடன் சென்ற 3 பேர் கொண்ட கும்பல், காதலர் தினத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, மஞ்சள் கயிற்றுடன் கூடிய தாலியை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மலைக்கோட்டைக்குச் செல்லும் காதலர்களுக்கு குடைச்சல் கொடுக்கச் சென்ற அந்த மூன்று பேரையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் கைது செய்தனர். அதேவேளையில் கோயிலுக்கு வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Also Read: “காதலைக் கொண்டாடுங்கள்.. இயற்கையாக; அரசியலாக; சமூகமாக”: உறவுச் சிக்கல்களும் சமூகமும் - சிறப்புப் பகிர்வு!