Tamilnadu
“சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. தமிழக மீனவா்களை பத்திரமாக மீட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்” : பின்னணி என்ன?
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 9 போ், தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு 59 நாட்களுக்கு பின்பு, இலங்கையிலிருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தடைந்தனா். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் வரவேற்று, தனி வேனில் புதுக்கோட்டை, ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்றனா்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது டிசம்பா் 18 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை கூறி, அவர்களை கைது செய்தனா்.
அதைப்போல் மறுநாளும் இலங்கை மீனவா்களை கைது செய்தனா். அடுத்தடுத்து 2 தினங்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் மாவட்டங்களை சோ்ந்த 54 மீனவர்களை கைது செய்து, அவர்கள் படகுகள், பிடித்த மீன்கள், மீன்பிடி சாதனங்கள் போன்றவர்களையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.
அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை ஒட்டுமொத்தமாக 54 பேரை கைது செய்த சம்பவங்கள் மீனவா் குடும்பங்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மீனவா்கள் விடுதலை கோரி, தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து தமிழக அரசு, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது. உடனடியாக ஒன்றியஅரசும், தமிழக மீனவா்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் வாரத்தில் தமிழக மீனவா்கள் 54 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 54 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழக மீனவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பிற்குள்ளான மீனவா்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களுடன் தொடா்பிலிருந்த மற்ற மீனவா்களும் தனிமைப்படுத்தப்பட்டனா்.
தமிழக அரசும் ஒன்றிய அரசுக்கு தகவல் தெரிவித்து மீனவர்களை இந்தியாவுக்கு தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மரியஸ்மைல்சன், சங்கா், சக்திவேல், மலையன், எட்வா்ட் ஹென்றி, ஜெயகணேஷ் 6 போ், புதுக்கோட்டை மீனவர்கள் சந்தோஷ், பிரதீப், வீரபாண்டி 3 போ் ஆகிய 9 மீனவர்களை விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனா்.
அதன்படி இலங்கையிலிருந்து சென்னை வரும் வந்தே பாரத் மிஷின் ஏா்இந்தியா விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு 9 மீனவா்கள் சென்னை வந்து சோ்ந்தனா். மீனவா்களுக்கு பாஸ்போா்ட் இல்லாததால், இந்திய தூதரகம் எமா்ஜென்சி சா்டிபிகெட் வழங்கி அனுப்பி வைத்தது.
சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவா்களை தமிழக அரசு சாா்பில் வரவேற்றனா். அதன்பின்பு ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த மீன்வளத்துறை ஆய்வாளா் ரமேஷ்பாபு 9 மீனவா்களையும் தனி வேனில் மீனவா்களை,அவா்களுடைய சொந்த ஊர்களில் ஒப்படைக்க அழைத்து சென்றாா்.
இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மேலும் 45 மீனவா்களுக்கும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கியபின்பு, படிப்படியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !