Tamilnadu

காவலர் பணிக்கான தகுதி தேர்வு.. எடை அதிகரிக்க ஆடை மேல் ஆடை அணிந்து வந்த பெண்: எச்சரித்த போலிஸ் அதிகாரி!

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், ரேடியோ டெக்னீசியன் 12, டேக் ஹேண்ட்லர் 29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித் தேர்வு கடந்த 19ம் தேதி முதல் கோரிமேடு போலிஸ் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது.

தினசரி 750 பேர் அழைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்த தேர்வில் 1,844 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாத ஆண்களுக்கு வரும் 21ஆம் தேதி உடல் தகுதி தேர்வு நடக்கிறது.மொத்த கான்ஸ்டபிள் பணியில் 32 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது. 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டது. நேற்றைய தேர்வுக்கு அழைக்கப்பட்ட 750 பேரில் 324 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் உடற்தகுதியுடன் 188 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்றைய உடற்தகுதி தேர்வில் மெலிந்த உடல் அமைப்புடன் வந்திருந்த ஒரு பெண், உடற்தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் இருந்தார். இருப்பினும் அவர் நடந்து செல்லும் முறை சற்று வினோதமாக இருந்தது. இதனால் உடல் தகுதி தேர்வு நடத்திய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பெண்ணை வரச்சொல்லி பெண் காவலர்கள் மூலம் சோதனை செய்ய உத்தரவிட்டனர்.

அப்போது, அப்பெண் பேண்ட் மேல் பேண்ட் அணிந்து இருந்தார். ஒரு ஜீன்ஸ் மீது மூன்று லேயர் பேண்ட் அணிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அணிந்திருந்த ஆடைகள் 2.2 கிலோ எடை இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கான்ஸ்டபிள் தேர்வுக்கு வந்த பெண் 43 கிலோ எடையில் இருந்ததால் உடல் எடை அதிகரித்து காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Also Read: திருமணம் செய்து வைக்குமாறு கொடுமைப்படுத்திய மகன்.. விபரீத முடிவு எடுத்த பெற்றோர் : நடந்தது என்ன?