Tamilnadu

"ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை.. மீறினால் கடும் நடவடிக்கை" - போக்குவரத்துத்துறை அதிரடி!

அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாக ஆய்வு செய்யும் போது, ' நமது ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதும் நடத்துனர்கள் பகலில் பணியில் முன் இருக்கையில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டு அமர்ந்து செல்வதாலேயே ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்படக் காரணம் என ஆய்வில் தெரியவருகிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நமது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என்பதால் அவர்கள் நலன் கருத்தில் கீழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. ஓட்டுனர்கள் பணியின் போது சட்டையில் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருத்தல் கூடாது. அதனை நடத்துனரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமராமல் பேருந்தின் பின்புறம் கடைசி இடது பின் இருக்கையில் இருந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். தொலைதூர பேருந்துகளில் இரவு 11 முதல் காலை 5 மணி அளவில் முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுனர் பணிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

3.மேலும் பணி நேரத்தில் ஓட்டுனர் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டாலோ சட்ட பிரிவின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எந்தெந்த மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தவேண்டும்?: பட்டியலை வெளியிட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்!