Tamilnadu

சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் நகை திருடிய போலி டாக்டர்... சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக கிளினிக் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூரைச் சேர்ந்த ரீகன் பிரபு என்பவர் மருத்துவர் எனக் கூறி அங்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது, 'உங்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் நீங்கள் அணிந்திருக்கும் தாலி சங்கிலியைக் கழற்ற வேண்டும்' என ரீகன் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ரீகன் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் ரீகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் மருத்துவ உதவியாளராகப் படித்துவிட்டு, மருத்துவர் எனக் கூறி பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் வேறு யாரிடமாவது இதேபோன்று நகைகளை திருடியுள்ளாரா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளினிக்கிற்கு வந்த பெண்ணிடம் போலி மருத்துவர் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 500 ரூபாய் கடனை திருப்பிக் கேட்டதற்காக காதை கடித்த நபர்... புதுக்கோட்டையில் அதிர்ச்சி!