Tamilnadu

எந்தெந்த மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தவேண்டும்?: பட்டியலை வெளியிட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்!

சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் குறித்த விவரத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக 18 உணவகங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த உணவகங்களில் பயணிகளின் உணவிற்காக உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக தற்போது நிறுத்த பணிமனை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் எந்தவித புகாருமின்றி பேருந்துகளை நிறுத்தி செல்ல அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், துணை மேலாளர்கள் (இயக்கம்) மற்றும் அனைத்து உதவி மேலாளர்கள் ஆகியோர் எந்தவித குறைபாடுமின்றி செயல்படுத்த வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் விவரத்தை துணை மேலாளர் (இயக்கம்) மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்) கோயம்பேடுக்கு தினசரி அந்தந்த உணவகத்திற்கும் மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்), விழுப்புரம் ஆகியோருக்கும் தெரிவிக்க வேண்டும்.

பல்வேறு இடங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் தற்போது உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் இடையே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி இருபுறமும் பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் பணிமனை வாரியாக கைபேசி செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும். விழுப்புரம் உதவி மேலாளர், பணிமனை வாரியாக சம்மந்தப்பட்ட உணவகத்தில் நின்ற பேருந்துகளின் விவரத்தை தினசரி தெரிவிக்க வேண்டும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் சம்மந்தப்பட்ட உணவகங்களில் பேருந்தினை நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இனிமேல் இந்த 5 மோட்டல்களில் பேருந்து நிற்க தடை : மோசமான உணவு காரணமாக அதிரடி முடிவு எடுத்த தமிழ்நாடு அரசு!