Tamilnadu

வீடு புகுந்து வெட்டுவேன்.. மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகிக்கு கால் முறிவு - விபரீதத்துக்கு என்ன காரணம்?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி, கட்சியினர் மத்தியில் பேசும்போது, அ.தி.மு.கவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால் அவனை வீடு தேடி வெட்டுவேன், மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும் என கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியதை பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் காவல்நிலைய போலிஸார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறை அவரை கைது செய்ய முயன்ற போது, வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலிஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தற்பொழுது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என் மேல கேஸ் கொடுத்தாலும் பரவாயில்ல.. வீடு புகுந்து வெட்டுவேன்” : வேட்பாளர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி!