Tamilnadu

“சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதெல்லாம் ‘மாஸ்டர் பிளானா’?” : பாஜகவை வெளுத்து வாங்கிய மே.வங்க MP!

நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்ந்து நடைபெற்றது.

மோடி அரசின் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையும் ஏழை - எளிய மக்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகவும், மேலும் கார்ப்பரேட் நலன் மட்டுமே அந்த பட்ஜெட்டில் உள்ளதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குற்றம் சாட்டி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஆளும் மோடி அரசு, வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறது. குறிப்பாக, இந்த அரசு, தங்களின் எதிர்காலத்தை நினைத்து அஞ்சுகிறது. நிகழ்காலத்தில் மீது இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை.

மேலும், குடியரசுத் தலைவர் தனது உரையின் ஆரம்பத்தில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி பேசுனார். அது வெறும் உதட்டளவில் மட்டுமே பேசியதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவின் ஆன்மாவாக விளக்கும் கண்ணியம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்த அரசாங்கம் மிகவும் பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.

அதேவேளையில், பல ஆண்டுகளாக பெருமையோடு சொல்லும் நமது வரலாறுகளை திரித்து வருகிறது. சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரர் என்கிறீர்கள். இந்த அரசு, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றுகிறது. பிரிட்டிஷ் அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை மாஸ்டர் பிளான் என்று சொல்கிறீர்கள்.

மேலும் பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது” : தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல் காந்தி !