Tamilnadu

“தமிழகத்தில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

உலகின் பல்வேரு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி, பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி முகாம்கள் மூலம் 9 கோடியே 54 லட்சத்து 74 ஆயிரத்து 779 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். 15 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கு கடந்த ஜனவரியில் முதலமைச்சர் தொடங்கிவைத்தபோது 33 லட்சத்து 46 ஆயிரம் என்ற நிலையில் இன்றுவரை 26 லட்சத்து 26 ஆயிரத்து 311 என 78.49 சதவீதம் சிறுவர், சிறுமியர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேரும், 68 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர் என்றார். தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் 62 லட்சத்து 64 ஆயிரத்து 878 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 96 லட்சத்து 22 ஆயிரத்து 615 பேரும் போடவில்லை என்றும் இவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய நடவடிக்கைகளினாலும், அறிவுறுத்தலினாலும் படிப்படியாக குறைந்து 30 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக குறைந்து வருகிறது என்றார்.

தமிழகத்தில் ஒமைக்ரான்,டெல்டா வைரஸ்கள் பரவி வருவதால் மருத்துவமனைகளில் தீவிரசிகிச்சை படுக்கைகள் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் படுக்கைகள் 6 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 94 சதவீதம் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதாரண படுக்கைகள் 5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், 95 சதவீதம் காலியாக உள்ளதால் பொதுமக்கள் பதட்டம் அடையத் தேவையில்லை என்றார். எனினும் உயிர் சேதங்களை தவிர்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Also Read: “தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைபிடிக்கப்படும்” : ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் !