Tamilnadu

தரக்குறைவாக பேசிய ஊழியர்கள்.. நிதி நிறுவன நெருக்கடியால் தீக்குளித்து தற்கொலை - பின்னணி என்ன?

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(58). இவர் வரகனேரி தஞ்சாவூர் ரோடு மாரியம்மன் கோயில் அருகே இரும்பு பட்டறை வைத்துள்ளார். கடந்த 2019ம் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 7 லட்சம் கடன் பெற்று மாதம் மாதம் ரூபாய் 20 ஆயிரம் தவணை தொகை கட்டி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தவறாமல் தவணை செலுத்தி வந்த அவர் கடைசி தவணை செலுத்த தவறி உள்ளார். இதேபோல மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் கடன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வசூலிக்க அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சேகர் திருச்சி நீதிமன்ற சாலை அருகே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் நெருப்பு உடலெங்கு பரவிய நிலையில் அவர் நடந்து வந்ததை பார்த்த, அங்கு இருந்த பொதுமக்கள் மண்ணை அள்ளி அவர் உடல் மீது வீசி போராடி தீயை அணைத்துள்ளனர்.

அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் ஜீப்பில் இருந்த துண்டை எடுத்து அவரின் உடலில் போற்றி தீயை முற்றிலுமாக அணைத்துள்ளனர். போலிஸ் ஜீப்பில் ஏற்ற முயற்சித்துக்கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் வந்து சேரவே உடனடியாக அவர் அதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் நீதிமன்ற காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Also Read: “காந்தியைக் கொன்ற கூட்டத்துக்கு காந்தியத்தைக் கொலை செய்ய முடியவில்லை” : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!