Tamilnadu

போதையில் ATMல் கைவரிசையை காட்டிய வாலிபர்; ரோட்டில் சென்றபோது மடக்கி பிடித்த திருச்சி ரோந்து போலிஸார்!

திருச்சி புத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் உள்ள ஏடிஎம்-ஐ நேற்று முன்தினம் இரவு 2-மணியளவில் அடையாளம் தெரியாத போதை ஆசாமி இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளார்.

இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றுள்ளார். வழக்கம் போல காலையில் அலுவலக ஊழியர்கள் ஏடிஎம் பராமரிப்பு பணிக்காக சென்று பார்த்த போது இயந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ஏடிஎம் உடைத்து திருட முயற்சி செய்த நபர் அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை பார்த்ததும் துரத்திப் பிடித்து விசாரித்ததில் இவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் என்றும் இவர் மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த அசாருதீன் (20) என்பதும் தெரியவந்தது.

இவரை கைது செய்து போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: கணவர் வருவதற்குள் 2ம் காதலனுடன் சேர்ந்து முதல் காதலன் கதையை முடித்த பெண் - சேத்தியாத்தோப்பில் பயங்கரம்!