Tamilnadu

மகளிடம் அத்துமீறிய தந்தை.. சுத்தியால் அடித்துக் கொன்ற மனைவி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரீத்தா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பிரதீப்பிற்குக் குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு போதையில் பிரதீப் இருந்துள்ளார். அப்போது தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி பிரீத்தா கணவனிடம் இருந்து மகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டிலிருந்த சுத்தியை எடுத்து கணவன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து பிரீத்தாவை கைது செய்தனர்.

இதையடுத்து மகளைக் காப்பாற்றுவதற்காகத் தற்காப்பிற்காகத் தாக்கியதில் கொலை நடந்துள்ளதால் அவரை விடுவிக்க ஓட்டேரி போலிஸார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று திருவள்ளூரில் நடந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்.. கணவன், மனைவி பரிதாப பலி : நடந்தது என்ன?