Tamilnadu

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு : தமிழர்களின் கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட ‘ரிசர்வ் வங்கி’ !

நாடு முழுவதும் 73வது குடியரசு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒருபகுதியாகசென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.

இதனை செய்தியாளர்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ஆர்.பி.ஐ. ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையரிடம் வழக்கறிஞர் G. ராஜேஷ் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கி சார்பில் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வருத்தம் தெரிவித்தார்

Also Read: முதுகலை மருத்துப்படிப்பில் 50% இடஒதுக்கீடு & 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை: ஐகோர்ட் மீண்டும் அதிரடி!