Tamilnadu

காதலனுடன் சென்று பணம் கேட்ட மனைவி; மண்வெட்டியால் வெட்டி சாய்த்த கணவன்; தேவகோட்டை அருகே பரபரப்பு!

தனது மகன்களுடன் மாமானார் வீட்டில் வசித்து வந்த வீராச்சாமி என்பவர் மனைவி அன்னலட்சுமியை மண்வெட்டியால் வெட்டி சாய்த்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவைகோட்டை அடுத்த கோவிலாம்பட்டியைச் சேர்ந்த அழகப்பனின் மகள் அன்னலட்சுமி (32). இவருக்கு முடிகரை கிராமத்தை சேர்ந்த வீராச்சாமியுடன் (42) திருமணமாகி தயாநிதி (12), வித்திஷ் (7) 2 மகன்கள் உள்ளனர்.

இப்படி இருக்கையில் அதே முடிக்கரையைச் சேர்ந்த சதீஷுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை வீராச்சாமி கண்டித்ததால் அன்னலட்சுமியும் சதீஷும் தலைமறைவாகியதோடு இருவரும் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் அன்று கோவிலாம்பட்டிக்கு சதீஷுடன் வந்த அன்னலட்சுமி பெற்றோரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த வீராச்சாமிக்கும், அன்னலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த வீராச்சாமி அன்னலட்சுமியை அங்கிருந்த மண்வெட்டியால் வெட்டி சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே அன்னலட்சுமி இறந்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அறிந்த திருவேகம்பத்தூர் போலிஸார் வீராச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாததால் மன உளைச்சல்? காதல் மனைவி எடுத்த திடீர் முடிவால் சிக்கிய கணவர்!