Tamilnadu

பண மோசடி புகார்... OPS, EPS-க்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகி தலைமறைவு!

திருவள்ளூர் அருகே கூட்டுறவுத் துறையில் பணி நிரந்தரம் செய்வதாக ரூ. 1 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்த அ.தி.மு.க நிர்வாகி ரமேஷ் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான ரமேஷை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (44). இவர் திருவள்ளூர் கூட்டுறவு துறையில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவரை கூட்டுறவுத்துறையில் வேலையை நிரந்தரமாக்கிவிடுவதாக கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ரமேஷ் அவரிடம் ரூ.4 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

கேட்ட பணத்தைக் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் நிரந்தரமாக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஈஸ்வரன் கடந்த 2019 மே மாதம் முன்பணமாக ரூ. 1 லட்சத்தை ரமேஷிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை கூட்டுறவுத்துறையில் பணியையும் நிரந்தரம் செய்யாமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட போலிஸில் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி வருண்குமார் உத்தரவின்பேரில் போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்த ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உட்கட்சி மோதலின்போது ஓ.பி.எஸ்ஆதரவளராக இருந்த ரமேஷ் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளராக ஓ.பி.எஸ் அணியில் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு... அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் ரெய்டு!