Tamilnadu

குப்பைத் தொட்டியில் எரிந்து கிடந்த சடலம் : சித்தி, தம்பி உட்பட 4 பேர் கைது - விசாரணையில் ’பகீர்’ தகவல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் குப்பை தொட்டியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயம் மற்றும் உடம்பு முழுவதும் கம்பி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, பின்பு குப்பை தொட்டியில் போட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுனர்கள் ஆய்வில் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து குப்பைத் தொட்டியில் எரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், கிடந்த ஆண் அதே ஊரை சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் முதல் மனைவி ராஜம்மாளின் மகன் செந்தில் (50) என்பது கண்டுபிடிக்கபப்பட்டது. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாய் உயிரிழந்த நிலையில், ஊரை விட்டு வெளியே சென்றவர்.

பல்வேறு மாநிலங்களில் சாமியாராக கோவில்களில் வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுத்திற்கு வந்த நிலையில், அவரது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளார்.

அந்த சொத்தில் அவரின் தந்தையின் இரண்டாவது மனைவியான ரத்தினகிரி (58) அவரது மகன் செல்வக்குமாருக்கும் (43) முதல் மனைவியின் மகன் செந்திலுக்கும் இடையே, சொத்து விற்றதில் தகராறு ஏற்பட்டு பங்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பங்கு தரமறுத்ததால் செந்திலை, ரத்தினகிரியும் அவரது மகன் செல்வக்குமாரும் சேர்ந்து வெட்டி கொலை செய்துவிட்டு, பின்பு உடலை ஊரின் சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர் என்பதும் தனிப்படை விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட செந்திலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க பெட்ரோல் வாங்கி கொடுத்த ரத்தினகிரியின் உறவினரான லோகநாதன்,(37) மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள் மற்றும் கொலையாளிகள் இருவருக்கும் தோட்டத்தில் தங்க வைத்து அடைக்கலம் கொடுத்த செலவக்குமாரின் நண்பரான செல்வம் (45) ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் கணவரின் முதல் மனைவியின் மகன் பெயரில் இருந்த சொத்தில் பங்கு கேட்டு தராததால் தாயும், மகனும் சேர்ந்து கணவரின் மூத்த மனைவியின் மகனை வெட்டி கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புகொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொலை செய்த தாய் மற்றும் மகன் அதற்கு உடந்தையாக இருந்த இரண்டு நபர்கள் உட்பட மொத்தம் 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்டு கிடந்த ஆண் உடல் அடையாளம் காணப்பட்டு கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து பெரியகுளம் காவல்துறையினர் சிறையில் அடைத்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Also Read: 20 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து.. இருவர் பலி... மீட்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!