Tamilnadu

விறுவிறுப்பாக நடந்துமுடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறிப்பாயும் காளைகளை வீரத்தோடு அடக்கிய காளையர்கள்!

தொட்டுப்பாரு... மச்சக்காளை மிரட்டுது ஆஹா... சூப்பர் மாடு, ஒரு தங்கக்காசு.. ஆஹா சூப்பர் மாடு.. ஒரு தங்கக்காசு.. ஒரு தங்கக்காசு.. என தொடர்ந்து உற்சாக வார்த்தைகளால் புத்துணர்ச்சியுடன் தொடங்கியது பொங்கல் திருவிழா..

அந்தவகையில், இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டியது.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு களத்தில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் அருகில் வி.ஐ.பி மற்றும் பிற பார்வைகள் அதற்கான கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

காளைகள் ஓடும் பகுதியான அவனியாபுரம் மெயின் சாலையில் இருந்து இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் வரை மூங்கில் தடுப்பில் இரும்பு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. போட்டியின்போது வீரர்கள் காயம் ஏற்படாமல் தரையில் தேங்காய் நார் பரப்பப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்கு பின் மக்களை மகிழ்விக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்கள் 624 காளைகளை அடக்க களம் இறங்குகிறார்கள் வீரர்கள் காலை உரிமையாளர் உடன் வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்குப் பிறகு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு வரும் வீரர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காயம் ஏற்படும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களும் தயாராக இருந்து பணிகளை மேற்கொண்டனர். அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கண்காணிப்பில் 1,500 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், முதலிடம் பெற்ற சிறந்த காளையாக மணப்பாறை தேவசகாயம் காளைக்கு ஹோண்டா பைக்

மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டது. அதேபோல், 24 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 18காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்த முருகன் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் தொடங்கிவைத்த இந்த ஜல்லிக்கட்டில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர. கதிரவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Also Read: திருமணமான கையோடு சைரனை அலறவிட்டபடி புதுமண ஜோடி ஆம்புலன்ஸில் ஊர்வலம் : கேரளாவில் நடந்தது என்ன?