Tamilnadu

“கல்லூரி தேர்வுகள் எப்போது?” : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "பல்கலைக்கழக மாணவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி கொரோனா தாக்கத்தைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர் நலன் கருதி எடுக்கப்படும் முடிவு என்பதால் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் இந்த முடிவு பொருந்தும். அரசின் உத்தரவிற்கு மீறி தேர்வுகளை நடத்தப்பட்டால் கல்லூரி மூடுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “27% இடஒதுக்கீடு வழக்கில் வெற்றி.. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி” : ‘முரசொலி’ புகழாரம்!