Tamilnadu

ரம்மியில் மூழ்கியதால் தலைக்குமேல் கடன் : சமாளிக்க முடியாமல் பிரெளசிங் சென்டர் உரிமையாளர் தற்கொலை!

சென்னை கோயம்பேடு முல்லை தெரு சீமாத்தமன் நகரை சேர்ந்தவர் தினேஷ்(41). இவர் கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் பிரௌசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கிய போது தினேஷ் ஹாலிலேயே உறங்கி உள்ளார். பின்னர் இன்று அதிகாலை அவரது மனைவி அறையில் இருந்து வெளியே வந்த போது தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். புகாரின் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: காதலுக்கு எதிர்ப்பு.. காதலனை இரவு முழுவதும் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய முதலாளி - நடந்தது என்ன?

பின்னர் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் நடத்திய விசாரணையில், தினேஷ் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தான் பலரிடம் பத்து லட்சம் ரூபாய் அளவில் பணம் வாங்கியதாகவும் அதை வேறு நபர்களுக்கு கடனாக கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார் யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்து உள்ளார்கள் என்பதை எழுதி வைத்துவிட்டு என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை கைப்பற்றிய போலிஸார் தினேஷின் மனைவியிடம் விசாரணை செய்தபோது தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததையும் தெரிவித்துள்ளார்.

கடனை திருப்பி தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய போலிஸார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தண்டவாளத்தில் குரூப் ஸ்டடி: பப்ஜியில் மூழ்கிய இளைஞர்கள் மீது ரயில் மோதல் - ராஜஸ்தானில் பகீர்!