Tamilnadu

“சட்டப்பேரவையில் இன்று - நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதி” : ஆளுநர் உரையில் முக்கிய தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. . சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் புதிய ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் தெரிவித்து தனது நன்றி உரையைத் தொடங்கினார்.

பின்னர் சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரை பின்வருமாறு :-

நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன; தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

அதேபோல், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது.

மேலும், அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இடைநிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்

Also Read: “தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.. முதல்வரை பாராட்டி ஆளுநர் உரை” : சட்டப்பேரவை அப்டேட் !