Tamilnadu

பஞ்சர் போட்டபோது டயர் வெடித்ததில் தூக்கி எறியப்பட்ட மெக்கானிக் பலி... தாம்பரம் அருகே அதிர்ச்சி!

தாம்பரம் அருகே லாரி டயருக்கு பஞ்சர் போட்டபோது டயர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர் தாம்பரம் - தர்காஸ் பிரதான சாலையில் கன்னடபாளையம், துர்கா நகர் பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கடைக்கு தனது மகன் ஜெயக்குமார் (12) உடன் வந்த அவர் பஞ்சர் போடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது லாரி டயருக்கு பஞ்சர் போட்டு பின்னர் டயருக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென டயர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் பிரகாஷ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பஞ்சர் போட முயன்றபோது டயர் வெடித்து மெக்கானிக் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’தகன மேடையில் தீ வைக்கச் சென்றபோது கண் விழித்த முதியவர்’ - அரண்டு போன உறவினர்கள்; டெல்லியில் விநோதம்!