Tamilnadu

’நடு ரோட்டில் முகவரி கேட்பது போல சிறுமியிடம் சில்மிஷம்’ - பட்டதாரி வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

சென்னை மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில் தனது 8ஆம் வகுப்பு படிக்கும் மகள் நேரு நகர் பகுதியில் நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனது மகளிடம் முகவரி கேட்பது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு சென்றதாகவும், இதே போல் இரு முறை சீண்டலில் ஈடுபட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் நேரு நகர் பகுதியில் பாலியல் சீண்டலில் ஈடுபட சுற்றித்திரிந்த போது பொதுமக்கள் விரட்டி பிடிக்க தப்பியோடி உள்ளார்.

பின்னர் 11 மணியளவில் மீண்டும் அந்த நபர் அதே பகுதியில் சுற்றிதிரிந்த போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். போலிஸார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பட்டுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (30) என்பதும் பி.பி.ஏ பட்டதாரியான இவர் மேற்கு முகப்பேரில் தங்கி ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இதே போல் பல சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் மீது போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Also Read: ஆசைக்கு இணங்காத மாடல் அழகிக்கு மிரட்டல்; மார்ஃபிங் போட்டோ அனுப்பியவர் எப்படி சிக்கினார்? போலிஸ் அதிரடி!