Tamilnadu

வாசிப்பை வளர்த்தெடுக்க அசத்தல் ஏற்பாடு.. பெற்றோர்களுக்கென நூலகம் அமைத்த அரசுப் பள்ளி - குவியும் பாராட்டு!

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட க.பரமத்தி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு ஈடாக ஸ்போக்கன் இங்கிலீஷ், ஓவியம், இசை, நடனம், பாட்டு உள்ளிட்டவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஊர் மக்களின் ஆதரவோடு ரூ.40 லட்சம் திரட்டி அறிவியல், கணினி ஆய்வகங்கள், கழிப்பறை போன்ற மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள பள்ளியாக க.பரமத்தி பள்ளி உள்ளது. ஏற்கனவே பள்ளியில் மாணவர்களுக்கு என்று தனியாக நூலகம் உள்ள நிலையில் தற்போது பெற்றோர்களுக்கு என்று தனியாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

"பள்ளி முடித்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர் சிறிது நேரம் இந்த நூலகத்தில் சென்று புத்தகங்களைப் படிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நூலகத்திற்குப் புத்தகங்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் ரூ.500க்கு மேல் புத்தகங்களை வழங்குவோருக்குப் பள்ளி சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

வாசிப்பு பழக்கத்தைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களிடத்திலும் கொண்டு செல்லும் வகையில் பள்ளியிலேயே தனியாக நூலகம் அமைத்துள்ள அரசுப் பள்ளியைப் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

Also Read: “சீமைக்கருவேல மரங்களை அழிக்க 30 கிராம் எடையிலான செயற்கைக் கோள்” : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!