Tamilnadu

மாணவர்கள் கவனத்திற்கு: பொதுத்தேர்வு நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

அப்போது, பள்ளிகளில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுப்பது, பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வி அலுவலர்களுக்கு போக்ஸோ சட்ட விதிகள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,

பள்ளி கட்டிடங்களில் தரம் குறித்து முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,600 பள்ளிகளின் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கேற்ப புதிய கட்டடங்கள் அமைத்து தரப்படும்.

ஜனவரி மாதம் 3 வாரத்தில் மாணவர்களுக்கு திருப்பதல் தேர்வு நடைபெறும். ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும்.

அரசு அறிவித்தும், சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதும், தேர்வுகள் வைப்பது தொடர்பாக புகார்கள் எழும் பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவி வரும் சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியம் எனவே முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் என்ன என்ன பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அவை அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.

TRB தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.