Tamilnadu

“மயக்க மருந்துகள் கொடுத்து ரயில் பயணிகளிடம் கைவரிசை” : தமிழ்நாடு போலிஸிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி செல்லும் ரயிலில், ராஜஸ்தானைச் சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் குமார் யோகி ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்களின் இருக்கை அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் இருவருக்கும் குளிர்பானம் குடிக்கக் கொடுத்துள்ளார். இதைக் குடித்த உடன் இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர். பிறகு இருவரும் கண்விழித்துப் பார்த்தபோது, பணம் மற்றும் செல்போன்கள் திருடப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு இது குறித்து நாக்பூர் ரயில்வே போலிஸாரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நாக்பூர் போலிஸார், சென்ட்ரல் ரயில்வே போலிஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த நபர் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறியபோது போலிஸார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் உத்தராகண்டை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 7 செல்போன்கள், நான்கு ஆயிரம் ரூபாய் பணம், 250 மயக்க மாத்திரைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் ரயில்வே போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: போலி சான்றிதழ் வழங்கி பல லட்சம் பண மோசடி.. தீயணைப்பு வீரர் கைது - போலிஸ் அதிரடி நடவடிக்கை !