Tamilnadu

பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தொல்லை.. இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈச்சங்காடு பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை போலிஸார் மீட்டனர். இவர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் இவரை அசோக், லெவின், ஞானசேகர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேம்குமாருக்கு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இந்த மாணவிகளிடம் பிரேம்குமார் ஆபாசமாகப் பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் ஆண் நண்பர் அசோக் என்பவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து மாணவிகள் உதவியுடன் பிரேம் குமாரை எளாவூர் சோதனைச் சாவடிக்குத் தனியாக வரவைத்துள்ளனர்.

அங்கு வந்த பிரேம்குமாரை அசோக் மற்றும் அவரது நண்பர் லெவின் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஈச்சங்காடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மற்றொரு நண்பர் ஞானசேகரனையும் பிரேம்குமார் அங்கு வரவழைத்துள்ளார்.

அப்போது மூன்று பேரும் சேர்ந்து பிரேம்குமாரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து குழிதோண்டிப் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருக்கும் இரண்டு மாணவிகளிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சம்பள உயர்வு கேட்டவரை சரமாரியாக தாக்கிய அதிமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர்; தருமபுரியில் பரபரப்பு!