Tamilnadu

சம்பள உயர்வு கேட்டவரை சரமாரியாக தாக்கிய அதிமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர்; தருமபுரியில் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் சில்லாராஹள்ளி பஞ்சாயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக டேங்க் ஆபரேட்டராக இருப்பவர் சந்தீபன். இவருக்கு அப்பகுதி பஞ்சாயத்து நிர்வாகம் கடந்த 10 மாதங்களாக சம்பளம் போடாமல் இருந்திருக்கிறது.

இது குறித்து சில்லாராஹள்ளி அதிமுக பஞ்சாயத்து தலைவி ஹரியாவிடம் சந்தீபன் கேட்டதற்கு அவரது கணவர் அர்ஜூனனிடம் கேட்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

பின்னர் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அர்ஜூனனிடம் கேட்டதற்கு, நீ பணியில் சேர்ந்த போது 1500 ரூபாய் சம்பளம் வாங்கினாய். தற்போது சம்பளம் உயர்ந்துள்ளது. எனவே நீ 1 லட்சம் பணம் கொடுத்தால்தான் சம்பளம் போடுவேன் என கூறி உள்ளார்.

இதற்கு என்னால் பணம் கொடுக்க முடியாது. ஏற்கெனவே என்னிடம் 1 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டுதான் பணி வழங்கினீர்கள் என கூறியதைடுத்து, அர்ஜூனன் சந்தீபனுக்கு பதில் மாற்று டேங்க் ஆபரேட்டரை வைத்து பணி செய்ய வைத்துள்ளார்.

இதனை அறிந்த சந்தீபன், அப்பகுதி பி.டி.ஓவிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவி ஹரியாவின் கணவர் அர்ஜூனனும், அவர்களது ஆதரவாளர்களும் சந்தீபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சந்தீபன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.