Tamilnadu

“நான் சுயநலக்காரன்தான்...” : கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை தான் சுயநலகாரன்தான் எனத் தெரிவித்தார்.

பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு அதிகம் பேச கூடாது. பேசுவதை விட செயலில் திறமையை காட்ட வேண்டும் என்று உணர்வோடுதான் எனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் பதவியை மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதுகிறேன்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, கொளத்தூர் தொகுதியில் வென்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டபோது அதனை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குத்தான் எடுத்துச் சென்றேன். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நான் சுயநலக்காரன்தான். நான் வாரத்திற்கு 3 முறை கொளத்தூர் தொகுதிக்கு வருகிறேன் .ஆனால் பார்த்த முகம் தானே என்று இல்லாமல் என்னை எப்போதும் இன் முகத்துடன் வரவேற்கிற சுகமே தனி தான்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். ஆனால் நீங்கள் தட்டாமலேயே அதாவது கேட்காமலேயே நாங்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறோம். 5 வருடம் செய்ய வேண்டியதை 5 மாதங்களில் நீங்கள் செய்து வருகிறீர்கள் என பத்திரிகைகள் பாராட்டி வருகின்றன. சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக எனது ஆட்சி இருக்கும்” எனப் பேசினார்.

Also Read: “கலைஞர்கிட்டயிருந்து இது ஒண்ணுதான் எனக்கு கிடைக்கல” : சண்முகநாதன் சொன்ன விஷயம்!