Tamilnadu

மீண்டும் ரெய்டு... அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் இன்று அதிரடி சோதனை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் கடந்தவாரம் சோதனை நடைபெற்றது. அப்போது ரூ. 2.16 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 இடங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரமான குழந்தைவேலு என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் குழந்தைவேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், பெரிபட்டியில் உள்ள தங்கமணியின் நண்பர் வீடு, ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அப்பார்ட்மெண்ட் மற்றும் மோகனூர் சாலையில் உள்ள ஈஷா அப்பார்ட்மெண்ட், உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Also Read: 69 இடங்களில் ரெய்டு.. முறைகேடாக ரூ.4.85 கோடி சொத்துக்கள் குவிப்பு: சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி!