Tamilnadu

“இப்படி கூடவா ஏமாறுவாங்க..?” : அண்ணன் தம்பி இருவரையும் ஏமாற்றி ரூ.34 லட்சம் பணம் பறித்த பெண் கைது!

சென்னையில் பெண் ஒருவர் இரண்டு ஆண்களை ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி ஏமாற்றி ரூ.34லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கடலோரக் காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஃபேஸ்புக் கணக்கில் சில மாதங்களுக்கு முன் சந்தியா என்ற பெயரில் இருந்து நட்பழைப்பு வந்துள்ளது. நட்பை ஏற்றபின் அந்தப் பெண் பாரதிராஜாவிடம் சகஜமாக பேசி வந்துள்ளார்.

அப்போது சந்தியா தன்னுடைய பெயர் கீர்த்தி என்றும், தன்னை ஒரு டாக்டர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இருவரும் மெசெஞ்சரில் பேசிப் பழகியுள்ளனர்.

ஒருகட்டத்தில் கீர்த்தி மீது காதல் பாரதிராஜா காதல் கொண்டுள்ளார். இதற்கிடையே கீர்த்தியின் சகோதரி என்று கூறி தீக்ஷி ரெட்டி என்ற பெண் ஃபேஸ்புக்கில் பாரதிராஜாவின் சகோதரர் (பெரியப்பா மகன்) மகேந்திரனிடம் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் காதலித்துள்ளனர்.

இருவரிடமும் காதலை காரணம் காட்டி ஒரே நேரத்தில் பணம் பறித்துள்ளார் சந்தியா. இரண்டு பெண்களும் ஒரே ஆள்தான் என்று தெரியாமல் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரும் வேறு ஒருவருக்கும் தெரியாமல் பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

பாரதிராஜாவிடம் கீர்த்தி ரெட்டியாக பேசிய வந்த சந்தியா, உங்கள் குரலில் மயங்கியே தான் கர்ப்பமாகி விட்டேன் என்றும் எனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் மருத்துவ செலவிற்கு பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

காதலியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத பாரதிராஜா, அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். அவரிடம் ரூ. 14 லட்சம் அளவுக்கு பணம் பெற்றுள்ளார் சந்தியா. இதேபோல, மகேந்திரனிடமும் சுமார் 20 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

நேரில் ஒருமுறை கூற சந்தித்துக் கொள்ளாமலேயே கர்ப்பமாகி விட்டதாகக் கூறி பணம் பறித்த நிலையில், மிகமிகத் தாமதமாக சுதாரித்துக்கொண்ட பாரதிராஜா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் விசாரணை செய்த போலிஸார், இருவரையும் காதலிப்பதாக ஏமாற்றி பணத்தை பறித்தது ஒரே பெண் தான் என்பதைக் கண்டறிந்தனர். மேலும் அவர் ஆவடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், ஐஸ்வர்யாவை கைது செய்து அவர் வேறு யாரிடமும் இதுபோல மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: GST மோசடி: பக்கத்துவீட்டுக்காரரின் ஆதாரை வைத்து தப்பியோடிய தென்கொரியர்கள் - சென்னை அருகே நடந்தது என்ன?