Tamilnadu

இரு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி.. வெறுப்பு பிரசாரம் செய்த மாரிதாஸ் மீண்டும் கைது!

இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என்று அவதூறாகவும், முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும், சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் கடந்த 2020 வருடம் ஏப்ரல் 2ம் தேதி மாரிதாஸ் யூடியூப் சேனலில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2020 ஏப்ரல் 4ம் தேதி நெல்லை மேலப்பாளையம் பகுதி த.மு.மு.க சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் அறிவுறுத்தலின்பேரில் மாரிதாஸ் மீது த.மு.மு.க உறுப்பினர் முகம்மது காதர் மீரான் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் அவதூறு வழக்கில் (குற்ற எண் 136/2020) மாரிதாஸ் இந்த வழக்கில் ‌பிணை பெறாமல் இருந்த நிலையில் தற்போது வேறு வழக்கில் சிறையில் ‌இருக்கும் மாரிதாஸை நெல்லை மேலப்பாளையம் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டு இருந்த நிலையில் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்படுகிறார்.

Also Read: கொரோனாவை வைத்து பிரிவினையை உண்டாக்குவதா? வெறுப்பு பிரசாரம் செய்த மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு