Tamilnadu
நைஜீரியாவிலிருந்து வந்தவருக்கு மரபணு மாற்றம் கண்டுபிடிப்பு - ஆட்சியர்களை உஷார்படுத்திய சுகாதாரத்துறை!
நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவருக்கு ஒமைக்ரான் முதற்கட்ட பரிசோதனையான டேக் பாத் சோதனையில் S வகை மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”தமிழகத்தில் இன்னும் டெல்டா வகை மாறுபாடுகள் பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை பாதிப்புகளும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவருக்கு ஒமைக்ரான் முதற்கட்ட பரிசோதனையான டேக் பாத் சோதனையில் S வகை மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரது மாதிரி சந்தேகத்திற்குரிய மாதிரியாக பதிவு செய்யப்பட்டு மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும், படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் படுக்கைகள் காலியாக உள்ளன. அவை அனைத்தையும் புதுப்பித்து மீண்டும் வார்டுகளை முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பொது மற்றும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் அதிக நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் நோயாளி தொடர்பு தொற்றாளர்கள் உடனடியாக கண்டறிவதுடன் மாதிரிகளை சேகரித்து தேவைப்படும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்திடவும் புதிய வகை உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை கண்டறியவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விமான நிலையங்களில் அரசு வழிகாட்டுதல்படி பயணிகளை முறையாக கண்காணிக்கவும் தொடர்ந்து கொரோன்ச்ச் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட வேண்டும்” என சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!