Tamilnadu
வீட்டுக்குள் ரெய்டு.. வெளியே டெம்போவில் வைத்து தக்காளிசாதம் சப்ளை!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் இன்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டின் முன்பு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒன்றுகூடி இருப்பது தவறு என்றும், கலைந்து செல்லுமாறும் அ.தி.மு.கவினரிடம் போலிஸார் வலியுறுத்தினர்.
ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே குவிந்துள்ளனர். அவர்களுக்கு தங்கமணி தரப்பினர் காலை உணவு, டீ விநியோகித்தனர்.
மேலும், வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு, டெம்போ மூலம் தக்காளி சாதம் கொண்டு வந்து வழங்கப்பட்டது. ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போதே வீட்டின் முன்பு உணவு விநியோகிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுபான்மையினர் சுதந்திரத்தில் கைவைத்த ‘விஜய்’, மக்களின் கேள்விக்கு பதில் சொல்வாரா? : சா.மு.நாசர் கேள்வி!
-
“கலைஞரின் புகழையும், சாதனைகளையும் எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!” : தவெக அரசுக்கு பி.வில்சன் கண்டனம்!
-
“நூலக அரங்கில் அகற்றப்பட்ட கலைஞரின் புகைப்படம்.. தவெக அரசின் காழ்ப்புணர்ச்சியா?.. குவியும் கண்டனங்கள்”
-
“தி.மு.க தலைவர் கரங்களால்.. பொலிவூட்டப்பட்ட அன்பகம் கட்டடம் திறப்பு.. 75 அடி உயரத்தில் பறந்த கழகக் கொடி”
-
“முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா.. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை” : முழு விவரம்!