Tamilnadu

சேலத்தில் தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி; ஆயுள் கைதியான முன்னாள் நீதிமன்ற ஊழியர்!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மேல் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மேட்டூர் முன்னாள் நீதிமன்ற ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.

வட்டியுடன் சேர்த்து கடனாக பெற்ற 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்தப்பட்ட நிலையில், நிலத்தின் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிக்கும் நோக்கில் நிலத்தின் உரிமையாளர் அசோக்குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி துன்புறுத்தியதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆள் கடத்தல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் கலைவாணன், சக்திவேல், ராஜா, சுபேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, வழக்கில் தண்டனைப் பெற்ற சக்திவேல் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமுற்றார். உடனடியாக நீதிமன்றத்திற்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற நான்கு பேரும் பலத்த பாதுகாப்போடு கோவை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Also Read: மொட்டை மாடியில் இருந்து குதித்த போது இறந்தே பிறந்த ஆண் குழந்தை; IIT மாணவி கவலைக்கிடம்; சென்னையில் பகீர்!