Tamilnadu

பிரியாணியில் புழு.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்.. நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்ற பகுதி உள்ளது. இங்கு பிரபலமான பிரியாணி கடை உள்ளது. இந்தக் கடையில் தினமும் ஆயிரம் பேர் வரை பிரியாணி சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.

இதனால், எந்நேரமும் இந்தக் கடை பிசியாகவே இருக்கும். இந்நிலையில் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகியோர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது, உணவக ஊழியர் பிரியாணி கொண்டு வந்து வைத்துள்ளார். அதைச் சாப்பிட முயன்றபோது அதில் புழு ஒன்று இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதுகுறித்து உணவக நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் கத்திரிக்காயிலிருந்து வந்திருக்கும் என அலட்சியமாகப் பதில் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உணவக ஊழியர்கள் பெங்களூருவில் உள்ள மேலாளருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் தொலைபேசியில் இளைஞர்களிடம் பேசியுள்ளார். அப்போது, பிரியாணியில் புழு இருந்தது எல்லாம் ஒரு பிரச்சனையா எனக் கேட்டுள்ளார். இது இளைஞர்களை கோபமடைய வைத்துள்ளது.

பிரபலமான உணவகம் என்பதால்தான் நம்பி சாப்பிட வருகிறோம். ஆனால் உணவில் இப்படி இருந்தால் எப்படி? இது குறித்து புகார் கூறினால் அதைக் கேட்கும் மனநிலையில் கூட அவர்கள் இல்லை. எனவே இந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: பிரியாணி பிரியர்களே உஷார்.. 20 கிலோ கெட்டுப்போன பிரியாணி பறிமுதல் : ஹோட்டல்களில் தொடரும் ரெய்டு!