Tamilnadu

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; வானிலை மைய உதவியை நாடும் காவல்துறை - வெளியான புதிய தகவல்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உள்ள காட்டேரி வனப்பகுதியில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணியளவில் கடுமையான மேகமூட்டம் காரணமாக நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவுத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் 70% காயங்களுடன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் குன்னூர் ,நஞ்சப்பா சத்திரம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட முத்து மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவுத் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நஞ்சப்ப சத்திர கிராம மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “கையெடுத்து கும்பிட்டாரு..” : பிபின் ராவத்தின் கடைசி நிமிடம் - மீட்பு பணியில் ஈடுபட்டவர் உருக்கம்!

இப்படி இருக்கையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில்,

1. ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் கைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2. நீலகிரி மாவட்டம் மின்சாரத் துறைக்கு சம்பவ இடத்தில் High Transmission Lines மற்றும் High Voltage Poles ஆகியவை உள்ளதா அது சேதமடைந்துள்ளதா என காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

3. சம்பவ இடம் அருகில் உள்ள வனப்பகுதிகளில் STF (Special Task Force) தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4. சம்பவ தினத்தன்று சம்பவ இடத்தின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

5. மேலும் பலதரப்பட்ட சாட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Also Read: ஹெலிகாப்டர் விபத்து: சம்பவங்களை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை - குன்னூர் மக்கள் சொன்ன உருக்கமான பதில் !