Tamilnadu

“கணவரை கொலை செய்ய முயற்சி.. புதுப்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்” : 5 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் கம்பத்தில் கேபிளில் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கும் கம்பம் மந்தையம்மன் கோவில் பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து 28 நாட்கள் ஆன நிலையில் கடந்த 8ம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது புவனேஸ்வரியின் அறை பூட்டி இருந்துள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து புவனேஸ்வரியின் உறவினர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது புவனேஸ்வரி வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புவனேஸ்வரி உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த இறப்பு சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்த விஷயம் வெளியே தெரிந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டில் இருப்பவர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்ததால், கவுதமனுடன் வாழ விருப்பம் இல்லாமல் புவனேஸ்வரி இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கவுதமனை கொலை செய்ய கூலிப்படைகளையும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவரை கூடலூர் தொட்டிப்பாலம் அருகே காரை மோதி கவுதமனை கொலை செய்ய முயன்றார். ஆனால் அவர் தப்பியதாகக் கூறப்படுக்கிறது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் அச்சத்தில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கவுதமனை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன்ராஜா (36) பிரதீப் (35), மனோஜ்குமார் (20), ஆல்பர்ட் (34), ஜெயசத்யா (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜெட்லி என்பவரை தேடி வருகின்றனர்.

Also Read: “திருமணம் முடிந்த 28 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை” : சோகத்தில் கிராம மக்கள் - என்ன நடந்தது?