Tamilnadu

“கையெடுத்து கும்பிட்டாரு..” : பிபின் ராவத்தின் கடைசி நிமிடம் - மீட்பு பணியில் ஈடுபட்டவர் உருக்கம்!

குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணி அளவில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் வனப்பகுதியில் கடுமையான மேகமூட்டம் காரணமாக மரத்தில் மோதி விழுந்தது.

அவ்வாறு விழுந்த ஹெலிகாப்டர் பயங்கரமாக தீப்பற்றி எரிந்ததால் ஹெலிகாப்டரில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களை மீட்க நஞ்சப்ப சத்திரம் மக்கள் அவர்கள் வீட்டில் இருந்த கம்பளி, போர்வை போன்றவற்றை வழங்கி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய ராணுவ வீரர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் ஒருவர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்தனர். அவ்வாறு மீட்புப் பணிக்காக தங்களது வீட்டில் இருந்த கம்பளி, போர்வை போன்றவற்றை வழங்கிய நஞ்சப்பன் சத்திரம் மக்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வீடு வீடாக சென்று நஞ்சப்பன் சத்திர பொதுமக்களுக்கு கம்பளிகளை இலவசமாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீட்பு பணியின் போது, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் நடந்த கடைசி உரையாடலை பற்றி பேட்டி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறுகையில், இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட நபரிடம் தான் நாங்கள் பேசினோம். அப்போது எங்க கிட்ட தண்ணி கேட்டாரு.. நாங்க உங்கள காப்பாத்தீடுறோம் சார்னு சொன்ன உடனே, கையெடுத்து கும்பிட்டாரு.

அம்புலன்ஸ்ல ஏத்துன வரைக்குமே கைய அப்படியேதான் வெச்சிருந்தாரு. 3 மணி நேரம் கழிச்சு ராணுவ அதிகாரி வந்து நீங்க பேசுனவருதான் முப்படை தலைமை தளபதி என அவரு இறந்துட்டாருனு சொன்னதும் ரொம்ப வேதனையாயிடுச்சு” என்றார்.

Also Read: இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!