Tamilnadu

“எந்த பாகுபாடின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்”: முதலமைச்சருக்கு பாமக MLAக்கள் பாராட்டு!

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் ரூ.38.53 கோடி மதிப்பீட்டில் 83 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ரூ. 300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தையும், ரூ. 100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்தார். மு.க.ஸ்டாலின்!

இந்நிகழ்வில் பங்கேற்ற சேலம் மேற்கு தொகுதி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள்," மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு, முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல், மேட்டூர் தொகுதி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், "கடந்த காலங்களில் உள்ள முதலமைச்சர்களை விட மிக எளிமையான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒருநாளில் மாற்றம் - நேற்று உத்தரவு.. இன்று முதல்வர் விழாவில் கணீர் குரலில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!