Tamilnadu

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கார் மூலம் சாலை மார்க்கமாக குன்னூர் புறப்பட்டுச் சென்றார். இரவு 9 மணி அளவில் குன்னூரில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

பின்னர் அங்குள்ள எம்.ஆர்.சி. மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, இராணுவ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லபட்டு, வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் உடல்களுக்கு தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Also Read: நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?