Tamilnadu

”திருமணம் ரத்தான போதும் விருந்தினர்களை உபசரித்து அனுப்பிய பெற்றோர்” - வேலூரில் நடந்த ருசிகர நிகழ்வு!

வேலூர் மாவட்டம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா (25) என்ற பெண்ணுக்கும், குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பால முருகன் (31) என்பவருக்கும் திருமணம் செய்வதாக பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி பள்ளிகொண்டாவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆடல் பாடல் நிகழ்வுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது.

மறுநாள் (டிச.,6) காலை 9 மணியளவில் திருமணம் நடைபெற இருந்த வேளையில் காலை 6 மணிக்கு மணப்பெண் சண்முகப்பிரியா இரு வீட்டாரையும் அழைத்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்றும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவீட்டாரும் மணப்பெண்ணை சமாதானம் செய்து சம்மதிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அப்பெண்ணோ திட்டவட்டமாக மறுத்ததோடு மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

இதனையடுத்து வேறுவழியின்றி கல்யாணத்தை நிறுத்திய இருவீட்டாரும், உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் காலை உணவு தயாராகிவிட்டது. அனைவரும் சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதன்படியே வந்த விருந்தினர்கள் அனைவரும் காலை டிபனை முடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வால் திருமண வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ரூ.7.5 கோடி மதிப்பிலான வீட்டை தீவைத்து கொளுத்திய உரிமையாளர்.. பகீர் கிளப்பும் சம்பவத்தின் பின்னணி என்ன?