Tamilnadu

தஞ்சை மருத்துவமனையில் சடலமாக மீட்கப்பட்ட சிசு.. தாயைக் கைது செய்த போலிஸ்: விசாரணையில் பகீர் தகவல்!

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, கழிவறையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த போலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, மருத்துவமனையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்று அரைமணி நேரம் கழித்து வெளியே வரும் காட்சிப் பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்தப் பெண் யார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சை பூதலூரச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. மேலும் இவர் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்ற சில மணி நேரத்திலேயே யாருக்கும் தெரியாமல் குழந்தையைக் கழிவறைக்குத் தூக்கிச் சென்று கழிவறை ஃபிளஷ் டேங்க்கில் போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் போலிஸார் அவரை கைது செய்து, எதற்காகக் குழந்தையைக் கொலை செய்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆட்டை கடித்ததால் நாய் அடித்துக் கொலை.. 2 பேர் கைது : நடந்தது என்ன?