Tamilnadu

ராகிங் கொடுமையால் மன உளைச்சல் 2ம் ஆண்டு மாணவன் தற்கொலை முயற்சி; மருத்துவக் கல்லூரி டீன் அதிரடி நடவடிக்கை!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவ மாணவியர்கள் என 200 பேர் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் நான்கு மாணவர்கள் , இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு சில மாணவர்களை ராக்கிங், செய்து உள்ளனர்.

குறிப்பாக உள்ளூர் மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்களை அதிகளவில் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த சரவணன் என்பவரை 4 மாணவர்கள் சேர்ந்து கொண்டு முட்டிப்போட வைத்தும், சிகரெட் வாங்கி வரச்சொல்லியும், தொந்தரவு செய்துள்ளனர். இதில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விடுதி காப்பாளர், உதவி காப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

ஆனால் ராகிங் செய்த மாணவர்கள் தருமபுரி நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதி காப்பாளர்கள் அதனை மூடி மறைத்து உள்ளனர். இதேபோல் தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்ததால் மனமுடைந்த மாணவன் சரவணன் நேற்று பிற்பகல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டும், இடது கையை அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த சகமாணவர்கள் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்பொழுது அந்த மாணவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சரவணன் பெற்றோர் கூறும் போது, கடந்த இருபத்தி மூன்றாம் தேதி கல்லூரி விடுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்த கல்லூரியில் தருமபுரியை சேர்ந்த மாணவர்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எனது மகனை அடித்து விட்டார்கள். இந்த பிரச்சனையில் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குளறுபடியால் எனது மகன் தற்போது பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிர்வாகத்தின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்ததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் மற்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்னுடைய மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கல்லூரி விடுதியில் மாணவர்கள் ஒரு சிலர் மது அருந்தி உள்ளார்கள். கல்லூரி காப்பாளர் அனைவருக்கும் தெரிந்தே இது நடந்திருக்கிறது. சீனியர் மாணவர்கள் தனது மகனை இரவு 12 மணி அளவில் சிகரெட் வாங்கி வரச் சொல்லி மிரட்டியதால் அவன் மறுக்கவே அவனை வேறு ஒரு அறைக்கு தூக்கிச் சென்று மது பாட்டிலால் கழுத்தில் வைத்து குரல்வளையை நெரித்து இருக்கிறார்கள். இதனால் குரல்வளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, ராக்கிங் புகாருக்குள்ளான நான்கு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வார காலத்திற்கு நான்கு மாணவர்களும், கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக இரண்டு காப்பாளர்களை இன்று விருப்ப அடிப்படையில் செய்ய உள்ளதாகவும், தினந்தோறும் விடுதியில் இரவில் ஒரு மருத்துவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

Also Read: தஞ்சை மருத்துவமனையில் சடலமாக மீட்கப்பட்ட சிசு.. தாயைக் கைது செய்த போலிஸ்: விசாரணையில் பகீர் தகவல்!