Tamilnadu
"உயர் கல்விகளுக்கு GST விலக்கு வேண்டும்": ஒன்றிய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!
உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் க.பொன்முடி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சமூக மேம்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி அளப்பரிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் (27.1) இருமடங்காக 51.4 என்ற அளவில் உள்ளது.
அதேபோன்று நாட்டிலேயே அதிகளவிலான பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சுமார் 35.25 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த சில முக்கிய நடவடிக்கைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், தகுதிச் சான்றிதழ், இடப் பெயர்வுச் சான்றிதழ் போன்றவற்றுக்கு இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2017 ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்தநடவடிக்கைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதால் உயர்கல்வி சேர்க்கை விகிதம் குறைய வழிவகுக்கும்.
கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பெற்றோருக்கும் கூடுதல் நிதிச்சுமையாக அமையும். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மாநில அரசு இளம் தலைமுறையினரை கல்வி பெற ஊக்குவித்து அவர்களை சமூக, பொருளாதாரத்தில் மேம்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உயர்கல்வி சார்ந்த அனைத்து கட்டண நடைமுறைகளுக்கும் ஜி.எஸ்.டி.வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர்க.பொன்முடி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என அறி விக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் க.பொன்முடிகடிதம் அனுப்பியுள்ளார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!