Tamilnadu

ரசாயன திரவத்தை குடித்த சிறுமியைக் காப்பாற்றிய அரசு.. குணமடைந்த சிறுமிக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

தென்காசி மாவட்டம், கேசிரோடு வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீதாராஜ் - பிரேமா தம்பதி. இந்த தம்பதிக்கு தனம், இசக்கியம்மாள் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு 5 வயது சிறுமியான இசக்கியம்மாள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணி வெளுக்கப் பயன்படும் ரசாயன திரவத்தை எடுத்துக் குடித்துள்ளார். பின்னர் சிறுமி எரிச்சல் தாங்காமல் துடிதுடித்துள்ளார். இதையடுத்து சிறுமியைதென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமிக்குச் சிகிச்சை அளித்தும் போதிய பலன் கிடைக்கவில்லை.

இது பற்றி அறிந்த மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனே சிறுமியைச் சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு இசக்கியம்மாளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று சிறுமி இசக்கியம்மாளை நேரில் சந்தித்தார்.

பின்னர் மருத்துவர்களிடம் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் இசக்கியம்மாளின் பெற்றோர்கள் தங்குவதற்கு சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதியில் அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கவைத்தார்.

இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று தற்போது சிறுமி குணமடைந்துள்ளார். இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறுமியும் அவரது பெற்றோரும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி இசக்கியம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தை சிறுமியின் பெற்றோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Also Read: ” ’காலத்தை வென்றவன் நீயே’ - நிஜ நாயகனாக விளங்கும் மக்கள் முதல்வர்” - முரசொலி செல்வம் புகழாரம்!