Tamilnadu

“சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி” : ஆசிரியர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.

முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.

11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு - ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதா?” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!